கொடிதினும் கொடிது இளமையில் வறுமை.
அது முதுகெலும்பை வளைத்து இயல்பை சிதைத்து வாழும் எண்ணம் உடைக்கிறது.
வறுமை மீள எந்த வழியும் இல்லை, வறுமையின் முக்கிய ஆயுதம் பசி. பசித்த வயிற்றை தவிர வேறெப்படியும் வறுமை தன் குரூரத்தை முழுமையாக மனிதனுக்கு உணர்த்த முடியாது/ முயலாது.
பசித்த வயிற்றை உணவைத்தவிர வேறு எதைக்கொண்டு நிரப்புதலும் வீண். செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயட்டும் என்றவன் வற்றிய வயிற்றுடன் ஒரு முழு இரவை கடந்திடட்டும் பார்க்கலாம் என நான் அழுதபடி மனதில் திட்டிய நாள் ஒன்று உண்டு.
பசியை புறம் தள்ளுவோம். எழுதி எழுதி தீர்த்தாலும் பசிக்கும் எனக்கும் அலுக்காது!
வறுமை தனது இரண்டாம்கட்ட எல்லையாக வகுத்திருப்பது அன்பின் வறுமை. வறுமையின் முகங்களில் இது கொஞ்சம் புதிரானது.
போலியான அன்பு
வீணடிக்கப்பட்ட அன்பு
விழலுக்கு இறைத்த அன்பு
பிரசவிக்காமல் மனக்குழியில் புதைந்து போன அன்பு
எல்லைகள் மீறி எதிர்பார்க்கப்பட்ட அன்பு என ஏராளம்..
அன்பு பசி அளவிற்கு குரூரமாக சித்திரவதை செய்வது இல்லை, மாறாக அழகாக கொலை செய்யும் தன்மை கொண்டது.
அது இந்திய இயலாமை கொலையாளிகள் போலல்லாமல் மேற்கத்திய நாடுகளின் சைக்கோக்கள் போல பகட்டான வெளித்தோற்றமும் சிந்தனைக்கு மீறிய அழுத்தமான அசிங்க குரூர முகம் கொண்டது. அடித்து வீழ்த்தி முதுகெலும்பை கூழ்மமாக்கி கொலையான பின்பும் பிணத்தை வதைத்து சிரிக்கும் அது!
காதல், தாய்மை, நட்பு என பலவகை முகங்கள் கொண்டது.
இவை இரண்டை கடந்த மூன்றாம் நிலையில் கற்பனை போலியான வதைமுறை ஒன்று வறுமைக்கு உண்டு. அது ஆட்படுபவரை தவிர கதை கேட்கும் அனேகம் பேரை சிரிக்க வைக்குமளவு வித்தியாசமானது.
காட்டாக காதலிக்கு பரிசுப்பொருள் வாங்க முடியாதது,
பிடித்த உணவை ருசிக்கமுடியாத நாக்கை துடிக்கவைப்பது,
வாகனக்கனவு,
அத்தியாவசியமல்லாத ஆடம்பர ஆசையை மெல்ல மெல்ல வேர்பிடித்து வளரவைத்து வாழ்க்கையை வெறுக்க வைப்பது போலானவை..
மனிதன் எத்தனை கோமாளியானவன் என்றால், முதலிரண்டில் மூர்க்கத்தனமாய் தாக்கப்பட்டு மீண்டெழுந்தாலும் மூன்றாமாவதில் அதிவிரைவாய் விழுந்து அரற்றிக்கொண்டிருப்பான்.
உலகம் முழுவதும் மனிதன் இந்த மூன்றுவகையான வறுமைக்கு எதிராக போராடிக்கொண்டே இருக்கிறான். முற்றிலுமாக அழிக்க அல்ல, தன் எல்லைக்குள் அதன் வேர் ஆகாரம் தேடாத அளவிற்கு போதுமானதாய். அந்த அளவிலேயே சிந்திக்கிறான், உழைக்கிறான், முயற்சிக்கிறான்.
சில தலைமுறைகளுக்கும் சேர்த்து..
ஆனால் நிதர்சனம் ஒன்றே, ஒருபோதும் அவனால் அந்த போரில் வெல்லவே முடியாது.
அதை ஏற்றுக்கொண்டு வாழ்பவன் பைத்தியக்காரன் என நகைப்புக்கு ஆளாவான்.
முடிந்தால் வறுமையை வென்றெடுக்க முயல வேண்டாம், அதுகுறித்து கொஞ்சம் சிந்தித்து பாருங்களேன். :)
நான் சிந்தித்த அளவில் இந்த பதிவு எழுத்து வறுமை என்றுதான் தோன்றுகிறது..
No comments:
Post a Comment